Saturday, June 26, 2010

உலகத்தலைவர்களின் ஜி8 மற்றும் ஜீ20

Friday, June 25, 2010
உலகத்தலைவர்களின் ஜி8 மற்றும் ஜீ20 .









எது மாற்றம்?


உலகத்தலைவர்கள் ஜி8 மற்றும் ஜீ20 மாநாடுகளையொட்டி ரொரன்றோ மாநகரை முற்றுகையிட்டுள்ள இத்தருணத்தில் கனடாவின் மூத்தகுடிகளின் வாரிசுகள் உரத்த குரலில் ஆர்ப்பாட்டம் நிகழ்த்துகின்றார்கள். மூன்றாவது உலக நாடுகளின் மக்களைவிட கேவலமான வாழ்வு எங்களுடையது. அதனை எந்த கனடிய அரசுகளும் கண்டுகொள்ளவல்லையென அவர்கள் கண்ணீர்மல்க தங்கள் கொடுமைகளை விபரிப்பதை எவரும் நின்று நிதானித்துக் கேட்கவில்லை. அவர்களின் மூதாதையரைகொன்று குவித்த எலும்புக்கூடுகளின் மேல்தான் உல்லாச மற்றும் சல்லாபங்களையும், ஜி8 மற்றும் ஜீ20 மாநாடுகளையும் இன்றைய கனேடிய அரசுகள் செய்கின்றன என்பதையும் எவரும் நிதானத்தோடு சிந்திப்பவர்களாயில்லை. தங்கள் இன்னல் கட்டுக் கடங்காநிலையில் பெரும்தெருவை மறித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களைப் போலவே இவர்களின் குரல்களும் ஓங்கி ஒலித்துப் பின் மறைந்தும்,மறந்தும் போகும். இதுவே உலக நியதியாயிருக்கிறது. அதுசரி மூலை முடுக்குகளிலும்,பட்டிதொட்டிகளெங்கும் நாள்தவறாமல் ஒலித்த எங்களின் தமிழ்க்குரல் உலகத்தலைவர்கள் ரொரன்றோ வந்துள்ள இந்த தருணத்தில் மட்டும் படுத்து விட்டதேன்?? உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்று நாங்கள் எதற்கும் சொல்லிகொண்டிருக்க முடியாது. அஞ்சுவதற்கு அஞ்சாமலிருப்பது பேதமையாகும். இந்தத் தருணத்திலாவது தமிழர்களை வழிநடாத்துகிற தமிழர்கள் இதனை உணர்ந்திருப்பது மனதிற்கு இதமளிக்கிறது.














கனடிய அதிபர் அமெரிக்க அதிபர் கரங்களுள்????






ஓடி..ஓடி..ஓடி..ஓடி


உட்கலந்த ஜோதியை


நாடி..நாடி..நாடி..நாடி..


நாட்களும் கழிந்து போய்


வாடி..வாடி..வாடி..வாடி..


மாண்டு போன மாந்தர்காள்


கோடி..கோடி..கோடி..கோடி


எண்ணிறந்த கோடியே


என்று ஊருக்கு உரக்கக்கூறிய சிவவாக்கியரையோ


அல்லது அதன் பிறகு அற்புதமான அழகு தமிழில் பாடிய பாரதியின்


மோகத்தைக் கொன்றுவிடு பாடலாலோ கூட இந்த மண்ணில் எம்மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை.


மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று அந்நாளிலிருந்து இந்நாள் ஒபாமா வரை கூக்குரலிட்டும் எது மாற்றம் என்று கூட எவருக்கும் புரியவில்லை .









மீண்டும் ஒரு தரம் பாரதியின் அந்த அற்புதமான பாடல் இதோ!!!



மோகத்தைக் கொன்றுவிடு !!

மாகவி பாரதி



மோகத்தைக் கொன்றுவிடு -- அல்லா லென்றன்


மூச்சை நிறுத்திவிடு


தேகத்தைச் சாய்த்துவிடு -- அல்லாலதில்


சிந்தனை மாய்த்துவிடு


யோகத் திருத்திவிடு -- அல்லா லென்றன்


ஊனைச் சிதைத்துவிடு


ஏகத் திருந்துலகம் -- இங்குள்ளன


யாவையும் செய்பவளே!


பந்தத்தை நீக்கிவிடு -- அல்லா லுயிர்ப்


பாரத்தைப் போக்கிவிடு


சிந்தை தெளிவாக்கு -- அல்லாலிதைச்


செத்த உடலாக்கு


இந்தப் பதர்களையே -- நெல்லாமென


எண்ணி இருப்பேனோ


எந்தப் பொருளிலுமே -- உள்ளேநின்று


இயங்கி யிருப்பவளே.





கள்ளம் உருகாதோ -- அம்மா


பக்திக் கண்ணீர் பெருகாதோ?


உள்ளம் குளிராதோ -- பொய்யாணவ


ஊனம் ஒழியாதோ?


வெள்ளக் கருணையிலே -- இந்நாய் சிறு


வேட்கை தவிராதோ?

விள்ளற் கா¤யவளே -- அனைத்திலும்

மேவி யிருப்பவளே!

Sunday, April 25, 2010

நாடுகடந்த தமிழீழ அரசும், நமச்சல் எடுக்கும் கனவான்களும்.....

புதிய புதிய செப்படிவித்தைகள்:



நாடுகடந்த தமிழீழ அரசும்,
நமச்சல் எடுக்கும் கனவான்களும்.....

என்னைப்பிடி உன்னைபிடி என்று உலகளாவிய ரீதியில் 135 உறுப்பினர்களைத்தெரிவதற்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது. ஒற்றுமையாகக் குரல் கொடுப்போம் என்று வாக்குப்போடுபவர்களுக்கு காதில் பூச்சுற்றிவிட்டு கடைகள், வீதியோரங்கள், குந்துமிடங்கள், மரப்பாலங்கள் என்று எனக்கே வாக்குப்போடுங்கள், என்னையே ஆதரியுங்கள் என்று கர்ச்சித்துத் திரிகின்றார்கள் வேட்பாளப் பிரபலங்கள்.காலத்திற்குக்காலம், நேரத்திற்கு நேரம் நிறம் மாறுவோராகத் தாங்கள் பிழைப்பதற்கான புதிய புதிய செப்படி வித்தைகளை நம்மவர்கள் உருவாக்கி வருகின்றார்கள்.


கடந்த 60 வருட காலமாக இந்த உலகத்துடனும், உள்ளூர் மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியத்தின் வல்லரசுகளுடனும் தமிழரின் தன்னாட்சி,மற்றும் வாழிட உரிமைகள்தொடர்பான அரசியல் சாசனங்களை உள்ளடக்கிய மிகப்ப் பெரியசட்டக்கோவைகள் வல்லமைமிக்க சட்டவல்லுனர்கள்,மற்றும் துறைசார்வல்லுனர்களால் வாதங்களாக வைக்கப்பட்டது.அதன் தொடர்பில் அவர்கள் குத்திப்பேசினார்கள். மிக அரிய வசனங்களினால் ஆர்ப்பரித்தார்கள்.மிகப்பெரிய தமிழர்பலத்துடன் பிரதான எதிர்க்கட்சியாக இலங்கை அரசாங்கத்தின் பாரளுமன்றத்திலே அவர்கள் இருந்தார்கள் .அவர்களின் பேச்சுக்களால் வைக்கப்பட்ட அடிப்படை உரிமை வாதங்கள் தாயக தேசியக் கோட்பாடுகள் மற்றும் இறையாண்மைக் கோசங்களை வெளியுலகமும் உள்ளுலகமும் கண்டுகொள்ளாத, கண்டுகொள்ளவிரும்பாத நிலையில் அம்முதிர்தமிழ்அரசியல் வாதிகள் கடவுளால்தான் தமிழனைக் காப்பாற்ற முடியும் என்று கூறிய வேளையில் இளம் போராளிகள் விடுதலை வேட்கையில் முடுக்கிவிடப்படுகின்றனர். அவ்விளைஞர்கள் தன்னாட்சி உரிமை வேட்கைமூலம் தமிழர்களை ஒன்றிணைப்போம் என்று சொல்லிச் சொல்லியே பல பல கிளைகளாகப் பிரிந்தார்கள். இப்போது சொல்வதுபோலவே தமிழனிடம் ஒற்றுமையில்லை என்கின்ற கோசத்தை முன்வைத்து வலிமைப்பட்ட குழுக்கள் எளிமையான குழுக்களை அழிக்கத்தொடங்கின. இப்படித் துப்பாக்கிகள் பலதரப்பிலும் பேச முற்பட்ட வேளையில்த்தான் பயத்துடன், தங்கள் உயிர்காக்கப் புறப்பட்டவர்கள் பணமிருந்த புலம்பெயர்ந்தவர்கள். பணமில்லா மனிதர்கள் குழுக்களில் சேர்ந்தார்கள். மாறிமாறி அழித்த இந்த மர்மப் போராட்டத்தில் வலிமையாளர்கள் எஞ்சியிருந்தார்கள். இறுதியில் அவர்களை விஞ்சிய வலிமையாளர்கள் அவர்களைத் தாக்கிய போது அவர்களைக்காக்க எவரும் இருக்கவில்லை.

இப்படியாக எல்லோரும் ஏறி இளைத்த குதிரையில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் ஏறத்துடிகின்றார்கள். இதற்காகப் பெரும் பணச்செலவில் தேர்தல் வேலைகள் துரித கதியில் முடுக்கி விடப்பட்டுள்ளன.தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் எதைப்பேசுவார்கள்? எங்கே பேசுவார்கள்? எப்படிபேசுவார்கள்?? என்பதை அறிந்துகொள்ளாத, அல்லது அறிந்து கொள்ள விரும்பாத புலம் பெயர் தமிழர்கள் வழமைபோலவே நமக்கென்ன இப்போதெல்லாம் வாக்குச் சாவடிக்குப் பொவது ஓர் பொழுது போக்கு என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

தமிழனையும் தமிழர் கலாச்சாரத்தையும் விட்டுகொடுக்காத இறையாண்மையைப் பேசுவதாகச் சொல்லிக் கொள்கிற இக்கனவான்கள் வேட்டிசால்வைகளில்லாமல் கோட்டுச் சூட்டுடன் தங்களின் புகைபடங்களுக்குப் புள்ளடிகள் போடக் கேட்டிருக்கின்றார்கள். இதில் ஈழவேந்தன் வேட்டி சால்வையுடன் விதிவிலக்கு.

இதையும் ஒருக்கால் சும்மா செய்து பார்க்கலாமே என்கின்ற தமிழர்களின் முனகலில் பெரும் பணம் இதற்கு வீணாகிறது என்பதை யாரும் எண்ணத் தயாராகவில்லை. காம்புகளில் முடங்கியிருக்கும் எம்மவரின்தாகம் தணிக்க அப்பணம் பயன்பட்டாலும் தேவலை. ஆதங்கத்துடன் வாக்களிக்கப்போகும் தமிழர்களுக்கு இவர்கள் சொல்லப்போவது இதைத்தான்.

வீழ்ந்தாலும் எம்மீசையில் மண் ஒட்டவில்லை.




Friday, April 2, 2010

ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற கவிதை அல்லது வதை

ஆண்டாண்டாக எம்மைத்தொடர்கிற



பெரிய வெள்ளிச் சிறப்புக் கவிதை அல்லது வதை:



பயணமுகவர்கள்



கொடுமையணிந்து

தினம்….தினம்…

வருகிறது பெரியவெள்ளி !!!!!





சிலுவையின்றிச்


சாகடிக்கப் படுகிறார்கள்


புதுப் புது யேசுக்கள் !!!!






ஓளிபாய்ச்சி


உயிர்த்தெழுந்திருகின்றன


உலகப் பெருந்தெருக்கள்.






புரியாத மொழி……


புரியாத ஊர்……….


புரியாத மனிதர்கள்……


ஈஸ்டர் தினத்திற்கு


முன்னிரவொன்றில்--நான்


அவனுடன் அந்த


அறையினுள் நுழைந்தேன்.






‘பொலிஸ் வந்தால்


புருஸன் என்று


ஏன்னையே சொல்"






மீசை மயிர்கள்


முகத்தில் உரச


நெருங்கி அமர்ந்தான்


அவன் முடிவெடுத்து விட்டான்






மூடிய கதவுக்குள்-எது


நடந்தாலும் வெளியே வராதென….






இனிச் சட்டையைக் கிழிக்கலாம்….


வாரினால் அடிக்கலாம்………


எச்சிலால் துப்பலாம்……….


பரிகாசப்படுத்தலாம்………..





இயேசுவைப் போலவே

பாடுகள் படுத்திக்

கொன்றும் போடலாம் .




இது பயணமுகவர்கள் காலம்





அதிஸ்டம் தேடி


அதிஸ்டமாய் வந்து


அதிஸ்டம் தொலைக்கிற


சீதைகள்!!!!!!!


முகவர்கள் வெட்டும்


இடுகாட்டுக் குழிகளில்…….

Tuesday, March 30, 2010

இந்தியப் பேய்களிடம் சிக்கிச் சிதறிச் சின்ன பின்னாமான ஈழத்துப் பெண்.

இந்தியப் பேய்களிடம் சிக்கிச் சிதறிச் சின்ன பின்னாமான ஈழத்துப் பெண்.




ஈழநாட்டில் வாழமுடியாது அகதியாக தமிழகம் வந்த திருமணமான பெண்ணை காவற்துறையினர் கற்பழித்த கொடூரம்...............
பாரத மாதாவின் மாண்புக்கே நேர்ந்த அவமானம் பற்றி தமிழகம் அமைதியாய் இருப்பது அழகாகுமா?



வாழமுடியாது தவித்து வந்த ஏதிலியான ஈழப் பெண்ணை வல்லுறவு செய்ய எங்கனம் மனம் வந்தது?


"தமிழகத்தில் உள்ள கரூர் பகுதியில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் தங்கியுள்ள முகாமில் உள்ள பெண்ணை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் அவர் மீது பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டிருந்தனர்.

நகர்காவலர் என்ற போர்வையிலிருக்கும் நயவஞ்சகர்களின் கொடுமை:






பொலிஸ்நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட இந்த துன்புறுத்தல்களால் மயக்கமடைந்த பெண்ணை அவர்கள் முகாம் பகுதியில் அனாதரவாக கைவிட்டு சென்றிருந்தனர்.






பொலிஸாரின் இந்த நடவடிக்கையால் மனமுடைந்த குமார் பத்மதேவி (28) என்ற ஈழத்தமிழ் பெண் தனக்கு தானே தீமூட்டி தற்கொலை செய்ய முயன்றிருந்தார். எனினும் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் (28) வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.






தன்னை தனியார் வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்ற தமிழக பொலிஸார் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும், அதனை வெளியே தெரிவித்தால் தனது கணவனை சுட்டுக் கொன்று விடுவதாகவும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடம் பத்மதேவி தெரிவித்துள்ளார்"




ஏதிலித் தமிழ்ப் பெண்ணின் உயிரையே குடிக்கும் பேய்களாகினர் காவல்த்துறை அதிகாரிகள்?

கொடியவர்களிடம் இருந்து பாதுகாப்புத்தேடி தமிழகம் வந்தால், தமிழகத்தில் சட்டத்தைக் காக்கும் காவலர்களே கொடியவர்களாக இருப்பது கொடுமையோ கொடுமை!!!




இதுதான் கருணையில்லா நிதியின் சட்ட ஒழுங்கா??

Monday, March 29, 2010

சாம்பல் மேய்கிறேன்......








































நான் சாம்பல் மேய்கின்றேன்.!!!


நான் திசை திருப்பப் பட்டுவிட்டேன்


எனக்கும் இனி வரும் – என்


தலைமுறைக்கும் விதி எழுதி விட்டார்கள்


இரும்பாணிகொண்டு...






சாம்பலை மேயச் சொன்னார்கள்


“மஞ்சள் காமாளை” வருமென்றறிந்திருந்தும்


மறுக்க முடியவில்லை - நான்


சாம்பலை மேய்கின்றேன்.






சொர்க்க வாசல் திறக்குமென்று என்


வீட்டு வாசலை அடைத்துவிட்டுச்


சொற்பொழிவாற்றினர்.


நான் எந்த வாசலும் அறியாது


ஏதிலியாகினேன்.






திக்கிற்கொரு வானொலிகளில்


உரக்கக் கத்தி எதை எதையோ பரப்புரை


செய்தனர். நான்


என்னவென்றும் ஏதென்றும்


தெரியாதவனாகி விழித்தேன்..






ஆளுக்கொரு பேப்பரும்,


நாளுக்கொரு தொலைக்காட்சியுமாக


என் விதைக் கொட்டைகளை நசித்து போட்டன


புதுப்புதுப் பேய்கள்..






“எம்முடன் வந்து பங்காளியாயிரு”


ஊர்கள் பிரிந்து என் தலை


பிடித்தாட்டின.


நான் பேச்சிழந்து மூர்ச்சையானேன்



இடர்களைத் துடைக்கும்


தூதர்கள் எனவே தினமொரு


முகத்தைப் போர்த்தியபடியே


சங்கிலிபிணைத்தென் கழுத்தினை


இழுத்தனர்.


நான் கழுத்துமறுந்து மூளியாகினேன்.

ரமோனா

Monday, March 15, 2010

ஒரு மாதிரியான கதை!




ஒரு தேவதையும்
அவள் தேர்ந்தெடுத்த எழுத்தாளனும்...

ரமோனா

கல்லைக் கடவுள் சிறுதடியாற் தட்டினான். கல் சிதறுண்டு போனது. சிதறுண்ட கற்கள் சிறு சிறு தீவுகளாகின. அந்தத்தீவுகளில் மண்ணைப்படைத்து,அம்மண்ணில் மனிதரைக் கடவுள் ஊதினார். மனிதர்கள் உதயமாகினர். உதயமாகிய மனிதரின் தலையில் கடவுள் தடியால் தட்டியபோது பள்ளத்தில் விழுந்தவன் பள்ளனென்றும், பயத்தில் நளுவி ஏறியவன் நளவனென்றும் வயற்புறத்தில் விழுந்தவன் வேளாளன், என்றும் சத்தமிட்டுத் தொலைத்தவன் பறையனென்றும் சாதிபிரித்தார். பனைகளும் தென்னைகளும் முளைத்தன. நாய்களும், பூனைகளும்,பிற விலங்குகளும் மனிதரை வலம் வந்தன.காகங்கள் தலைக்கு மேலாய்ப் பறந்தன. இப்படித்தான் அந்தத்தீவு உருவானதாம்.
தீவின் அந்தோனியார் கோவிலில் அவனது 12வது பிறந்த தினத்திற்கு நேத்திவைத்து பூசைசெய்து குருத்துவம் படிப்பிக்கப்போவதாக ஒப்புக்கொடுத்து பூசைக்கு வந்தோருக்கெல்லாம் பாண்கொடுத்த அம்மா சொன்ன கதையது.
ஆனாலும் அடுத்த பிறந்த தினத்திற்கு அவன் வீடு அவனுக்காய் இருக்கவில்லை. பிள்ளை பிடிப்பவர்கள் அவனை இயக்கமொன்றிற்கென இரவிரவாக இழுத்துச் சென்று விட்டார்கள்.அங்கு அவனுக்கும் அவனையொத்த பலருக்கும் யானையேற்றங்களும் குதிரையேற்றங்களும் பயிற்றுவிக்கப்படவில்லை.குறுந்தடிகளைவைத்து வேலிபுகும் பயிற்சிகளும்,சென்ரியில் வேவுபார்த்தல், பங்கர் வெட்டுதல்,பாதைத்துப்பரவு எனப்பல சுளுவான வேலைகளும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப் பட்டது. அவ்ர்களுக்கு வேளாவேளைக்குச் சாப்பாடும் இருந்தது. குறுந்தடிகளை வைத்துப் பபயிற்சிகள் பயிற்றுவித்த ஒரு நாளில் அவன்வேலிபுகுந்து தப்பி ஓடினான். வாய்ப்பந்தல் போடுவதில் வல்லவானான அவன், தன் உறவினர்களின் உதவியோடு பிரான்சிற்குள் தப்பி வந்த போது பாலகப் போராளி என்று அவனைப் பாசமுடன் பிரான்சு அரசு அகதியாக்கி அங்கீகரித்தது. அந்தப்பாலகப்போராளி பிரான்சின் அகதிமெத்தையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அவனோடு கூடவே அவனது பைபிளையும் தலையணையடியில் புதைத்து வைத்திருந்தான்.நித்திரையில் அவனது நினைவுகள் சிதறிப்பறந்து கொண்டிருந்தன.
ஜேர்மானிய நகரான ரியரின் முதன்மைச்சாலையினூடாக நடந்து, மூன்றாவது சந்தில் மொட்டாக்கோடு ஒரு உருவம் பழமையும் புதுமையுமான அந்த விரிந்த பங்களாவிற்குள் புகுந்தது. நெடுநாள் பழகிய வீட்டிற்குள் போவதைப்போல நுளைந்த அந்த உருவம் உள்ளிருந்த கண்ணாடி அலுமாரியின் முன் நின்றது. உள்ளே நீண்ட நாட்களுக்கு முன் எழுதி மை காய்ந்த கடிதங்கள் அடுக்குகளாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்கலங்க அவதானித்தது. "உன் அன்புக்காதலி ஜெனி" என்ற கையெழுத்தைப்பார்த்த போது குலுங்கிக்குலுங்கி அழுதது. தான் தூக்கிவளர்த்த பிள்ளையின் கடிதமது என்று மனதிற்குள் முணுமுணுத்த வண்ணம் திரும்பியது. வீட்டுவாசலில் ஜெனியும் மார்க்ஸஸும்,எங்கெல்ஸ்ஸும் சிரித்தவண்ணமுள்ள படத்தை வாஞ்சையோடு பார்த்து விட்டு வெளியேறியது.
இதிலிருந்து வடமேற்காக சுமார் 35 கிலோமீற்றர் தூரத்தில் மிகச்சிறிய குக்கிராமம் வோடன் இருந்தது. அங்குதான் மார்க்க்சின் நண்பன் எங்கெல்ஸ் வளர்ந்து வாலிபனானவன்.திராட்சைக் கொடிகள் படர்ந்து குலைகள் மதர்த்துச் செழித்து வளர்த்திருந்த அந்த ஊர்கள் இன்று கட்டிடக்காடுகளால் நிறைந்திருந்தன. எங்கெல்ஸ் ஊரோடு ஒத்தோட முடியாமல் பின் பிரான்சில் வாழ்ந்தவர். அவர் இருந்த அறையைப்பார்க்க அந்த உருவம் விரும்பியிருக்கவேண்டும். வானவெளியில் எம்பிக்கிளம்பியது. அப்போது அதன் முகம் சுடராய் ஒளிர்ந்தது.
3வது சாமத்திற்கான தேவாலாயத் திருமணி அடித்தோய்ந்த வேளை படுத்திருந்த பாலகப் போராளி தன்னுடைய தீவின் அந்தோனியாரின் திருமணியோ என நினைத்து அருண்டு படுத்த வேளை அந்த உருவம் அந்தப் பாலகப்போராளியின் அகதி மெத்தைக் கருகில் நின்றது. மெல்லக் கண்திறந்த அவன் கன்னி மரியாள் தன் கண்முன் நிற்பதைக்கண்டு அதிசயித்தான். மனதைத்திடப்படுத்திக் கொண்டு எழுந்து முழங்காற்படியிட்டு ஜெபித்தான். அவன் உடுத்திருந்த சறம் முதன் முதலாக (wet dream ) எனப்படும் வெள்ளை வெளியேற்றத்தால் நனைந்திருந்தது. அவன் அதைப்பார்த்த போது வெட்கம் பொங்கித் திடுக்கிட்டான்.
மகனே வெட்கப்படாதே. இதுஆடவர் எல்லோர்க்கும் சகஷம். இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. நீ இப்போ பாலகன் அல்ல இளைஞன் என்று அந்தக் கன்னிமரியாள் பேசிய போது அவனுக்கு மகிழ்வாய் இருந்தது. எங்கெல்ஸ்ஸுன் அறையை தலைகீழாக்கி வைத்திருக்கிறார்கள் என்றது கன்னி மரியாள். இது அகதிகளுக்கான அறை என்றான் பாலகப் போராளியாயிருந்து இப்போ இளைஞனானவன்.
நேற்று அது வேறொருவருடையதாயிருந்தது. இன்று அது உன்னுடையதாயிருக்கிறது, நாளை அது மற்றொருவருடையதாகும்,இதுவே அகதி அறைகளின் தத்துவம் என்றது அந்த கன்னிமரியாள் உருவம்.
அன்னையே நீங்கள் தான் கன்னிமரியாளோ?? சந்தேகத்தோடு கேட்டான் அவன்.
இல்லை நானும் கன்னிமரியாள் போன்றவள்தான் என்று புதிர் போட்டது அந்த உருவம்.
அப்படியென்றால் தாயே நீங்கள் யார்??
என் பெயர் ஹெலனா டெமூத்(Helena Demuth), கார்ல்மார்க்ஸின் மனைவி ஜென்னியை வளர்த்தவள் நான். எங்கெல்ஸ் என் நண்பன், கன்னிமேரிக்கும் கணவன் இல்லாமலேயே குழந்தை பிறந்தது. எனக்கும் அப்படியே ஆனது. அதன் பேரிலேயே நானும் கன்னிமரியாள் போன்றவள்தான் என்றேன் என்றது அந்த உருவம்.
பாலகப் போராளிக்கு எதுவும் பிடிபடவில்லை பைபிளில் தலைமுறை தலைமுறையாகக் கன்னிமரியாளின் வம்சம் எழுதப்பட்டு வகைப்படுத்தப்பட்டிருக்கிறதே என்றான் அவன்.
பரிசுத்த ஆவிதான் தலைமுறைகளின் தலைவன் என்றது உருவம்.
நான் தனிநாயகமுதலியின் வம்சம் என்றான் பாலகப்போராளி விட்டுக்கொடுக்காமல்.
எவனுக்கும் எந்த வம்சமும் கிடையாது எல்லோரும் பரிசுத்த ஆவியின் பிள்ளைகளே என்றது அந்த உருவம்
பாலகப் போராளிக்கு கோபம் பொத்துக் கொண்டுவந்தது.
வம்சமென்று எதுவுமில்லை எல்லோரும் ஒன்றே என்றால் அதற்காகப் போராடிய நாமெல்லாம் என்ன கேணையர்களா?? இனம் பிரிச்சவனெல்லம் இழித்தவாயர்களா??
மொழிக்காக உயிரிழந்தோரெல்லாம் மடையர்களா??கேட்கவேண்டும் போலிருந்த கேள்விகளை மனதோடு அடக்கிக் கொண்டான்.
மௌனத்தோடு தலகுனிந்திருந்த பாலகப் போராளியை பார்க்க அவளுக்கு பாவமாய் இருந்தது.
அவன் மேல் இரக்கப்பட்டு " மகனே உனக்கு எது வேண்டுமானாலும் கேள்" என்றாள் ஹெலன்.
நான் ஊரார் மெச்ச எழுத்தாளானாக வேண்டும் என்றான் அவன்.
கையைச் சுழற்றி மனிதக் குரங்குவடிவிலான ஒரு எழுதுகோலை அவன் மீது விட்டெறிந்து, புல் உலர்ந்து பூ உதிரும்; உன்னுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகின்றேன் இந்தக் கணத்திலிருந்து நீ ஊரார் மெச்சும் எழுத்தாளானாவாய் என்று வரமருளியது.
அவளின் வாக்கு உடனே பலித்ததுபோல எழுதுகோலைக்கையிலேடுத்தவுடன் மானிடக்குரங்குபோலவே அவன் உடம்பு தினவெடுத்தது.
மகிழ்ச்சிபொங்க நான் உனக்கே என் எழுத்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன் தாயே என்று நாக்குளறத் தொழுதான்.இந்த அன்னிய மண்ணிலே நான் அகதியாவே மடிந்து விடுவேனா?? தாயே என் எதிகாலம் பற்றிச் சொல்லும் என்று சற்றும் மனம் தளராமல் கேட்ட போராளியை நோக்கி அந்தப்புனிதப்பாவை ஒரு புன்னகை சிந்தினாள். நீ புலன்பெயர்ந்தோருக்குத் தேவனாயிருப்பதற்காகவே, உன்னை உன் தீவிலிருந்து புறப்படப்பண்ணினார் கடவுள் என்றும் நானே கதைகளின் கர்த்தர் என்றும் துணிந்து சொல் என்றாள் அவள்.
உன் இனத்தின் எதிர்காலம் சவக்குழியில் போனாலும் உன் எதிர்காலம் பிரகாசமுறும். விடாக்கண்டனும், கொடாக்கண்டனுமாய் இருக்கிற உன்னைச் சிலர் குருவாக்குவார்கள். அச்சீடர்களின் குடும்பங்களைச் சிதைத்து நீ சுகந்தரிப்பாய். அந்தமான் செல்லூலர் சிறையை படம் பிடித்த தடித்த தோல்ச் சீமாட்டி உன்னை ஆசீர்வதிப்பாள். அவள் தயவில் நீ திரையில் வருவாய். புலிவாலை நீ பிடிப்பாய். அதனால் புகழடைவாய் எலியாய்க்கிடந்த நீ எல்லா மண்ணிலும் சண்டியனாவாய் என்று உத்தரம் கூறி, அந்ததேவதை மறைந்து போயிற்று.
அவன் கடைவாய் நீரைத்துடைத்தபடி புரண்டு படுத்தான்.கனவு விடுவதாயில்லை.
எழுதிக்கொண்டிருந்தான் அவன் எழுத்தால் பூவுலகம் விம்மியது. மூலை முடுக்கெங்கும் அவன் எழுத்து நிறைந்து வழிந்தது. புதிய புதிய சங்கீதங்களையும், பைபிளின் 3வது ஏற்பாட்டையும் எழுதிய அவன் 41வது தீர்க்கதரிசியாகப் பிரகடனப்படுத்தப்பட்டான். "ம்" என்ற மூச்சொலியில் அவன் உலக இருப்பை எழுதத் தொடங்கிய வேளை மேற்குத்திசையில் பூகம்பங்கள் வெடிக்கத்தொடங்கின. கீழ்த்திசையில் பேரலை எழுந்து ஊர்களை விழுங்கியது. மட்டக்களப்பிலிருந்தும், மண்டைதீவிலிருந்தும் அதல பாதாளத்தில் புதைந்திருந்த நீல நிறப்பாம்புகள் வெளிப்பட்டுச் சாரைசாரையாக உலகெங்கும் ஊரத்தொடங்கின.இராமேஸ்வரத்தில் இணக்கமிலாதவனுக்கு அடித்த்த போது உலகச் சண்டியனாவாய் என்கிற அன்னை ஹெலன்னவின் வாக்குத் தத்தம் நிறைவேற்றப்பட்டது. அதற்குப்பிரதியுபகாரமாக "ஹெலானாவின் குழந்தைக்கு யார் அப்பன்" என்று அவன் பூமியை உலுப்பத் தொடங்கினான். பூமி உருள உருள அவனுடைய கேள்விகளும், எழுத்துக்களும் பூமிப்பந்தை உப்பிப் பெருக்கச்செய்தன. அவனது பெண்ணியமும், இன்னபிற பேசாப் பொருள்களிலும் மேலும் பெருத்து உப்பிய உலகம் பலூனாய் வெடித்துச் சிதறி நிர்மூலமானது.
காதடியிற்கேட்ட வெடியோசை கேட்டு, அகதிமெத்தையில் கனவுகண்டு கொண்டிருந்த பாலகப் போராளி பயந்து போய்க் கண்விழித்தான்.
அவனது சறம் உண்மையில் வெள்ளை பட்டிருந்தது. வெட்கத்தோடு அங்குமிங்கும் பார்த்தான்.அவன் கனவிற்கண்ட தேவதைகள் எவையும் அவன் கண்முன் இருக்கவில்லை.
------------------

Tuesday, March 9, 2010

பகவானுக்குப் படுக்கை அறைப் பணிவிடை....

பகவானுக்குப் பணிவிடைசெய்தேன் படுக்கை அறையில்....
கை கால் பிடித்து விடுவது தப்பா? - ரஞ்சிதா பரபரப்புப் பேட்டி
Tue, 2010-03-09 07:45
நித்யானந்தா செக்ஸ் லீலையில் சம்பந்தப்பட்டு பரபரப்பாக பேசப்பட்டுவரும் நடிகை ரஞ்சிதா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். இப்போது அவர் முதல்முறையாககுமுதம் ரிப்போர்டர் இதழுக்கு செல்போன் மூலம் பேட்டியளித்துள்ளார்.
அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...
அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?
உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.
நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்
..."

உப்புச்சப்பற்ற ஊடகவிலாளர் மாநாடும் உண்மையை மூடுவதற்கான ஒப்பனைகளும்
ரஞ்சிதாவுடன் நீ படுக்கையிலிருந்தாயா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்பது தானே பதில் ஆனால் விளக்கங்களும் விசேடஅறிக்கைகளும் எதைமூடிமறைக்க?????

Thursday, March 4, 2010

போலிச்சாமியார்களின் திருவிளையாடல்கள்.

வீட்டுக்கு பூட்டு: ரஞ்சிதா தலைமறைவு
[ Thursday, 04 March 2010, ]

சுவாமி நித்யானந்தாவுடன் படுக்கையறையில் ரஞ்சிதா இருப்பது போல் வெளியான வீடியோ படக்காட்சிகளால் தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரஞ்சிதா 1992-ல் பாரதி ராஜா இயக்கிய “நாடோடி தென்றல்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் “பெரிய மருது”, சத்யராஜுடன் “அமைதிப்படை”, அர்ஜுனுடன் “கர்ணா” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார். மணிரத்னம் இயக்கும் “ராவணன்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். “தெற்கத்தி பொண்ணு” டி.வி. தொடரிலும் நடித்தார். கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன்” என்றார். இந்த நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன. தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது. வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. நித்யானந்தாவுக்கு எதிராக சதி திட்டம் வகுத்தவர்களிடம் பணம் வாங்கி இதுபோல் நடித்து இருக்கலாம் என்கின்றனர். அவர் வெளி வந்தால்தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். ரஞ்சிதா மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்று தெரியவில்லை. ஏற்கனவே விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைதான போது நடிகர் சங்க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.




ரஞ்சிதாவுடன் இருப்பதாக கூறப்படும் நபர் நான் இல்லை நித்தியானந்தா மறுப்பு
நடிகை ரஞ்சிதாவுடன் இருப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோவில் இடம் பெற்றிருப்பது சுவாமி நித்தியானந்தா இல்லை என்று அவரது மடம் கூறியுள்ளது. இதுதொடர்பாக நேற்று சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நித்தியானந்தாவின் ஆசிரமம் சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருப்பது போன்ற வீடியோக்களையும், படங்களையும் பிரசுரிக்க பத்திரிகைகளுக்கு தடை விதிக்கக் கோரப்பட்டது. அந்த மனுவில், எனக்கு 17 நாடுகளில் 45 லட்சம் பக்தர்கள் உள்ளனர். இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உள்ளிட்டவற்றை அளித்து வருகிறேன். இந்த நிலையில், எனது மடத்தில் புகுந்து விட்ட பிரேமானந்தா என்கிற லெனின் கருப்பன் என்பவர்தான் எனது புகழைக் கெடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகையுடன் நான் இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இதை சன் டிவி திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வருகிறது. அதில் இருப்பது நான் அல்ல. எனவே இந்த வீடியோவையும், புகைப்படங்களையும் சன் டிவி, தினகரன், தமிழ் முரசு, நக்கீரன் ஆகியோர் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி மாணிக்கவாசகர், தடை விதிக்க மறுத்து விட்டார். மேலும், வழக்கை மார்ச் 8ம் தேதிக்கு ஒத்திவைத்த அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். நித்தியானந்தாவின் ஆசிரமம் விளக்கம்... இதற்கிடையே, நித்தியானந்தாவின் ஆசிரம இணையதளம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், எங்களுக்கு எதிராக நடந்த கூட்டுச் சதி, கிராபிக்ஸ் வேலைகள், வதந்திகள் ஆகியவைதான் இந்த செய்திகளின் பின்னணியில் உள்ளதாக கருதுகிறோம். இதை எதிர்த்து சட்டப்பூர்வமான நடவடிக்கைளுக்குத் தயாராகி வருகிறோம். சுவாமிஜியின் அருள் பெற்ற லட்சக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து சுவாமிஜி மீது அன்புடன் உள்ளனர். இதற்கு மேல் இந்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை. இருப்பினும், இந்த சிக்கலான நேரத்தி்ல் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிஜியின் பின் நிற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.



Sunday, December 20, 2009

பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......



பாதங்கழுவுதலும் விருந்துபசாரமும்.......


சீடர்கள் சூழச் சிரித்தபடியே
விருந்து நாயகனின்,
பாதம் கழுவிப் பணிந்து தொழுவதாய்

பாசாங்கு செய்து
விழுந்து கிடக்குமென்
யூதாஸ் கரியோத்து...

எழுந்திரு !!!

காட்டிக்கொடுக்கும்
காரியம் முடிந்துமேன்
காலில் கிடக்கிறாய்?? எழுக நீ

எழுந்துன் முப்பது வெள்ளி
முடிச்சினைப் பெறுக!!

நீ காட்டிக் கொடுத்த
கடவுளாம் அவனக் கல்லால் அடித்தோ
கத்தியால் சிதைத்தோ, வாளால் அறுத்தோ
கொல்வதாய் இல்லையாம்...
நல்ல இனத்துத் தேக்கின் சிலுவையில்
அறைந்து கொல்வதாய் அரசனின் செய்தி

அதுவுமுனக்கு நன்மையாய்ப் போனது
எழுந்திரு யூதாஸ்

சுரணையே இல்லா மனிதர்கள் எங்கும்
எதற்கும் தலையினை ஆட்டுவர் என்பதால்
சிலுவையில் அவனை அறைந்து கொன்றபின்
இரத்தம் சிந்த இரும்பாணிகளுடன்
இறைவன் இருத்தல் தகாதெனச் சொல்லி
இறைவனை இறக்கித் தெருவினில் போட்டுச்
சில்லறைக்காக சிலுவையை விற்குக!!

தேக்கு மரத்துச் சிலுவை என்பதால்
நல்ல விலை பெறும் .

இன்றைய நாளில்
விண்ணக வேந்தனை வெற்றுடலாக்கினர்
வீதியில் போட்டுச் சிலுவையை விற்றனர்.
காணுகின்ற கண்களைத் தோண்டினர்.
தேவன் தெரு வீதியில் கிடந்தான்.
மனிதர்கள் அவனை மிதித்து
ஆளுக்கொரு திசையில்
விரைந்து மறைந்தனர்.

- ரமோனா

Saturday, December 5, 2009

ஆக்கிரமிப்பாளனே !!!













ஆக்கிரமிப்பாளனே !!!
ஆயுதமும் - உன்
அதிகாரமும்,என்னை
அம்மணமாக்கலாம்.

அந்தரித்துபோன ஆட்டுகுட்டியைப்
பந்தாடுவதைப்போல
தலயிருந்து கால்வரை - நீ
கடித்துக்குதறலாம்......

ஏகாதிபத்தியமும், எடுபிடிகளும்
கற்பித்தவாறு
மூளை,நரம்பு,நாளம் என்று
மூளச்சலவை
ஊசிகள் போடலாம்.......
மார்பு வயிறு, பெண்குறி
யாவையும்
துவேசமும், குரோதமும் கொண்ட - உன்கரங்கள்
குத்திக்கிழித்துக்
கொடூரம் புரியலாம்......

மொத்தத்தில் எல்லாவிதமான- என்
இருத்தலினையும் - நீ
இல்லாதொழிக்க
கங்கணம் கட்டலாம்!!


என் மூச்சுத் தங்கிடும்
ஒவ்வொரு நிமிடமும் - இந்த
உத்தரிப்பு ஸ்தலத்துள் - ஓர்
மண்புழுப்போன்று - எனை
நசுக்கவும்.... மிதிக்கவும்.....
உனக்கு அதிகாரமுள்ளதாய்
அதட்டி நீ பேசலாம்.

கற்களும் ,முட்களும் கால்களை இடற
நெஞ்சைப் பிளந்து.......
இறுகச் செருகிய இரும்பாணிகளுடன்
சிலுவை தோளிலே, முள்முடி தலையிலே

இதற்கும் மேலாய்
முதுகைப் பிய்க்கும்
கம்பிகட்குப்பின்
கசையடித்தண்டனை!

ஒப்பிட்டுப்பார்த்தால்
எத்தனை யேசுக்கள்!!


ஆக்கிரமிப்பாளனே!!!
இன்னும் என்ன?
செய்திகளுக்கும் கூக்குரல்களுக்கும்
திரைபோட்டு - என்
எல்லா அவஸ்தைகளையும்
உலகத்தின் கண்களில்
மறைத்துப் போடலாம்!!

மிஞ்சிபோன என்னுயிரையும் - நீ
கொன்று புதைக்கலாம்....
கண்களைக்கீறி
விலையாய் விற்களாம்....
பாகம்பாகமாய்
என்னுடம்பின் உதிரியை
உலகச் சந்தையில் சந்தைப் படுத்தலாம்.....

ஐ,நா சபையும்,மற்றும் - உலக
மத்தியஸ்த எஜமானர்களும் - உன்
வாய்ச்சவடாலில் மயங்கிப்போய்
எலும்புக்காடும் வால்களாய் - எந்தன்
இறைச்சியைத்தின்று ஏப்பம் விடலாம் .

எல்லாம் முடிந்ததாய் - நீ
எண்ணியிருக்கையில் தான்
என் மண்ணின் புல்லின் நுனிகூடப்
போரெடுத்து வாள்தூக்கும்!!!

கல்லிற்றுக் கீழே கனல் கக்கும் எரிமலைகள்!!!

துள்ளிவரும் மான் கூடத்
துவக்கெடுத்துன் கதை முடிக்கும்!!!

கல்லறைகள் வெடிக்கும்.!!!

கதைமுடித்தோமென்றிருந்த
மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!!

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.

மரணம் அவர்க்கில்லை!!!!
மனுக்குலத்து மீட்பிற்காய்
மரித்தெழுந்த யேசுவைப்போல்
ஈழத்தெருவெங்கும்......
இவர்கள் எழுவார்கள்!!!!!!!!


---ரமோனா---


உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

கருத்துக்கள்
(5) Aakkramippaalane 5.
சனிக்கிழமை, 05 டிசம்பர் 2009 12:04
(thamilini vairamuthu)
குருதி குடித்தவன் புற்று நோயில் புரளட்டும்..

பிணந்தின்னிப் பசாசுகள் 4.
ஞாயிற்றுக்கிழமை, 29 நவம்பர் 2009 05:54
(செங்கோன்)
தமிழ் மக்களினதும், போராளிகளினதும் பிணங்களையும், மூன்று இலட்சத்திற்க்குமதிகமான மக்களின் அவலங்களையும்,போட்டுமிதித்து அதைத் தங்கள் ஏணியாக்கிக் கொண்டு அதில் சுயலாபம் தேடி உலகம் முழுமைக்கும் பவனிவந்து கொண்டிருக்கிற புலம்பெயர் சீமான்களும், சீமாட்டிகளும் நிறைந்து கிடக்கிற வேளையிது .ஆளுக்கொரு மாவீரர் நாளுரைகூட வெளியாகிக் கொண்டிருக்கிற வேதனையான சூழல். சூரிச்சில் கூடிய தமிழ்க் கூட்டமைப்பு ,தமிழர் நலன்காப்பதாகச் சொல்லி தமது நலன்காக்கப் பாராளுமன்றத்திற்கும் அது போடுகிற பிச்சைப் பதவிகளுக்குமாக பயணிக்க நிற்கிறது. அதற்காக ஒட்டுமொத்த தமிழர் இனத்தையுமே அழித்துவிடத் தயாராகி வருகிறது. .இதற்குள் நல்லவற்றை எப்படிக்கண்டடைவது என்பது கேள்விக்குறியாகிறது. நான் இப்போது நின்று கொண்டிருக்கிற எம்பசி கிறாண்டில் (Embassy Grand) கூடிய மக்கள் முகத்தில் எந்த விமோசனமும் தெரியவில்லை.விமோசனம் எங்கிருக்கிறது என்று அறியவும்,அதற்காக நின்று நிதானித்துச் சிந்திக்கவும் கூட அவர்களால் முடியவில்லை.அரத்த மாவை அரைப்பதும்,துவைத்த துணியைத்துவைப்பதும் தான் தமிழர்கள் வேலையா ?என்ற கேள்வியைக்கூடக்கூட்டமைப்பு பேச்சாளியிடம் கேட்க முடியவில்லை. நம்பிக்கை தரும் வாசகங்கள் எதுவும் அவரால் வைக்கப்படவுமில்லை.ஆனாலும்

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.
மரணம் அவர்க்கில்லை!!!!

என்ற உங்களது நம்பிக்கையைப் போலவே எம் எல்லோர் ஆதங்கமும். தேய்ந்த தமிழினம் திருந்துமா?????????

அபூபக்கர்களும்,அமாவாசையும் 3.
சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 18:07
(சேனாதி)
இப்படித்தான் ஆளுக்காள் பல்லவி பாடி தமிழினத்தைக் குட்டிச் சுவாராக்கி வைத்திருக்கிறீர்கள்.
கும்புடிப்பூண்டிக் காம்பில கொடியேத்தின புண்னியவான் களைப் போலத்தான் புலத்துப் புண்ணியவான்களும் பிழைக்க வழிதேடி பலபுனைவுகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கினம். இப்ப கவிதையும்,கப்பியங்களும்,உங்க பேச்சுமில்லை முக்கியம். காம்பில சீரழிகின்ற மக்களுக்கு ஒரு தீர்வுகாணுங்கோ, அல்லது தீர்வுகணாவிழைகின்ற நாடுகளையாவது விடுங்கோ?
செத்தவை பிறகெழும்பி வந்தென்ன செய்யப்போகினம். அதுதான் மொத்தமாய் எல்லாம் சுடலையாய் போச்சே???அபூபக்கருக்கும்,அமாவாசைக்கும் என்ன சம்பந்தமோ அதுபோல்த் தான் எல்லாம் தெரிந்ததாய் கவி வடிக்கிற நீங்களும்.

மாவீரர்கள் மறுபடியும் பிறப்பார்கள் 2.
சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 17:37
(நேசன்)
சீமானை வெளியேற்றி விட்டார்களே என்று மனம் கனத்த வேளையில் தான் ஈழ நேசனைப் பார்க்க நேர்ந்தது.தமிழர்களாகிய எமக்கு என்ன நடக்கிறது. எவ்வளவு அவமானங்கள். ஏன் இப்படி?? ரமோனாவின் கவிதை சொல்வதைப் போல் மரித்தெழுந்த யேசுவைப்போல மனுக்குல மீட்பர்களான எம் மாவீரர்கள் மறுபடியும் பிறப்பார்கள். உறுதி எடுப்போம். வீர வணக்கங்கள்.
நேசன்

கதைமுடித்தோமென்றிருந்த மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!! சனிக்கிழமை, 28 நவம்பர் 2009 17:18
(தேவா பாலசுந்தரம்)

கல்லிற்றுக் கீழே கனல் கக்கும் எரிமலைகள்!!!
துள்ளிவரும் மான் கூடத்
துவக்கெடுத்துன் கதை முடிக்கும்!!!

கல்லறைகள் வெடிக்கும்.!!!

கதைமுடித்தோமென்றிருந்த
மாவீரர் இங்கே மறுபடியும் பிறப்பார்கள்!!!!

மண்ணிற்குயிர்கொடுத்த
மாமறவர் எல்லோரும்,
விண்ணகத்துத் தேவனினால்
விடுதலைக்கென்றனுப்பிவைத்த
மண்ணகத்துத் தெய்வங்கள்.
மரணம் அவர்க்கில்லை!!!!
அற்புதமான வரிகள்.மாவீரர் நாள் கவிதை ஈழத்தவர்களின் மனக்குமுறலைவெளிப்படுத்தியுள்ளது. ரமோனாவிற்கும், ஈழநேசனுக்கும் வாழ்த்து.

Sunday, November 8, 2009

தேவதைக் குஞ்சே!!!

மிகுந்த சர்ச்சையை ஏற்ப்படுத்திய இக்கவிதையை ஈழநேசன் இணைய வலை பிரசுரித்திருந்தது. இணைய வலை முகவரி www.eelanation.com



தேவதைக்குஞ்சே.....
மூக்கும் முழியுமாய்
தமிழ்மொழி பேசும்
அழகுச் சிட்டே !!!

நீ ஏன்
இங்கு வந்து
பிறந்து தொலைத்தாய்...

கன்னங்குழி விழ
தத்தி நடந்து மழலை பேசிடும்- உன்னைச்
சிதறடிக்கப்போகிறது
இந்த மண் !!!

உன் பஞ்சு மேனியைப்
பாளும் குண்டு தின்று தீர்க்கவும்...
செல் துண்டு உந்தன் தலையினைப் பிளக்கவும்...
வல்லுறவில் நீ வதைபட்டுப் போகவும்...
விதி உனக்காய் விதிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றிற்கும், தப்பி நீ உயிரோடிருந்தால்
எஜமான்களின் எடுபிடியாகவும்,
மனித வெடிகுண்டுப் பொட்டலமாகவும்
மாறப்போகிறது உன் மழலை உடல்.

எப்படியோ உனக்கு ஒரு
கொடூரம் இந்த மண்ணில்
எழுதப்பட்டிருகிறது .

எல்லோரையும் போலவே
வீரிட்டழுதபடி விழுந்த - உனக்குத்
தமிழ் என்று பெயரிட்டுத்
தரணி அழித்த பரிசு இதென்று
சந்தோசப்படு !

காடு தீப்பற்றி எரிகையில்
கேட்பாரற்றுக் கருகிப் போகிற - சிறு
புல்லாய் இருக்கிற பிஞ்சுக் குருத்தே!!
இந்த மண்ணில்
இன்னும்
ஏன் வந்து பிறந்து
தொலைத்தாய்???


துராகமெது,சத்தியமெது
என்று சுயம் தேட முற்பட்டுச் செத்த
உன் முன்னோர்கள் போலவே
இறப்பதற்கு முன்னாடியுள்ள
கடைசி நிமிடங்களில்
எதுவும் புரியாமலே
உன்
எஞ்சியுள்ள இரத்தத்தையும் -இப்
பூமிக்கிறைத்து விட்டுப் போ.


அறிவையும்,தன்னம்பிக்கையையும் -உன்
மண்டையிலிருந்து பிடுங்கிவிட்டு அதை
அடிமை எனும் மண்போட்டு
நிரப்பி விடத்துடிகிறது
அதிகாரம்.

இனி
உன் தலையிலும் கொம்பு முளைக்க
வேண்டுமென நினைப்பது வீண் !!!

மயிர் நீத்தால் உயிர்வாழாதாம் கவரிமான்.
உனக்கு மயிர் மட்டுமா போயிற்று???

உனக்குள்ளிருக்கும்
சத்தியத்தின் குரலைக்கேட்பவன் - எவனும்
இவ்வுலகில் இன்னும் பிறக்கவில்லைத்தாயே !

இன்னமும்
உனக்கென உன்முன் கிடக்கிற
உன்னதங்கள் எது?

சுடலையில் நடக்கவும்,
சுடு மண்ணுள் படுக்கவும்,
குருதியில் குளிக்கவும்,
பட்டினிகிடந்து பயந்து
தவிப்பதற்கும் மட்டுமே
உன்பிஞ்சு உடல் படைக்கப்பட்டதெனில் -நீ
இருந்தென்ன?? செத்தென்ன??

சாவைவிடவும் பிழைத்தலே மேலெனில்
சாவைவிடவும் மோசமான பிழைத்தலை
உனக்கென்று எழுதிவைத்தது எது ?????

உனக்கெதிரான - எல்லா
அனியாயங்களிலும்,
ரகசியங்களிலும் - உன்
விடுதலையும், வாழ்வும்
புதைந்திருப்பதாக
இப்போதும் சொல்லும்
அயோக்கியர் முகத்தில்
உன்னிடம் இன்னும்
எஞ்சிக்கிடக்கிற உமிழ்நீரைக்
காறி உமிழ்ந்துவிட்டு கண்மூடிப் போ !!



- ரமோனா


உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி


உன் தேவதைக் குஞ்சுக்கு என்ன
முலைப்பாலா? மூத்திரமா? ஊட்டி வளர்க்கிறாய்
அய்ம்பத்தி எட்டில் பாணந்துறையில்
ஐயரைக் கோவிலில் போட்டு எரித்தவன்
இந்தப் பொழுதில் ஒரு மன நோயாளியை
கடலில் கரைத்தான்..


பொல்லாலும் தடியாலும்
போட்டு அடித்த அந்தப்
பொல்லாத சாதிக்கு என்ன
பூட்டா இருக்கிறது..?


இந்த இரண்டு கொலைகளுக்கும் இடையில்
அய்ம்பது ஆண்டுகள்..


இராசபக்சா இராட்சதர்களை
உரசி வளர்த்துவிட்டு இப்பொழுது
சரத் பொன்சேகாவால்
சரிபார்க்கிறது இந்தியம்..


அம்மா தாயே..
இராட்சதர்களுக்கு இறப்பில்லை...


அதனாலேதான் நாம் இன்னும்
அடிமைகளாய்..



விலங்கு ஒடிப்பது என்து விளையாட்டு அல்ல..
ஒருபக்கம் கெட்டவர்கள் இருபக்கமும் எட்டப்பர்கள்..


உனக்குத் தெரியுமா?
வியட்னாம் யுத்தம்..


அம்மணமாய் அந்தச் சிறுமி..
வீதி நீட்டுக்கு ஓடும் காட்சியைக்
காணும்வரை
அமெரிக்கர்கள் அழவில்லை..


சிறுமியைப் பார்ததபின்தான்
செல்லரித்தது சமூகம்..


ஒன்றேமுக்கால் இலட்சம் இராணுவம்
வியட்னாமில் இருந்து
இழுக்கப்பட்டார்கள்...


அந்தச் சிறுமி யார்தெரியுமா?
வெள்ளை தேசங்களில்
மனிதநேய மகத்துவமாய்..இப்பொழுது
புனிதம் காட்டும் ஒரு புண்யவதி..!


அய்நா மன்றமும் அணிநாடுகளும்
ஆதரித்து எடுத்து
அறிவார்ந்தவளாய் ஆக்கியிருக்கிறது..


பகலில் மறைந்து இரவில் வெடித்த
எரித்திய மண்ணுக்கு
ஆயிரம் செங்கடல் நீளத்திற்கு
எலும்பும் தோலுமாய் நின்று ஒரு
இளைத்த ஒருசாதிதான் இன்று
சுதந்திரம் பேசுகிறது..


பிலிப்பைன்ஸ் எப்படிப்
பூத்தது சுதந்திரம்..


சிறையில் இருந்து வெடித்து வந்தான்
சுதந்திர வீரன்..அக்கினோஸ்


பூட்டிய சிறையும் பொடிப்பொடி ஆனதே..!


ஏழையாய் இரு..கோழையாய் இராதே!
வாளில்லை என்றால் வீரமா போகும்..
எரியும் நிலத்தில் ஈரம் போகுமா?
அரக்கம்தான் ஆட்சி..வரும்பார் மீட்சி..


ஓ..சாகப் போகிறாய் என்றா
வேகிறாய் நீ..?


இட்லர் எரித்த
அய்ம்பது அய்ம்பது இலட்சம்
தொலைந்த பின்னும்
யூதம் அழிந்ததா?


பீனிக்ஸ் பறவைகள் சாகாது அம்மா!
சாம்பலில் இருந்தும் உயிர்த்து வரும்..

இன்று அல்லது நாளை அல்லது
நாளை மறுநாள்..


எங்கோ இருந்தும் எங்கள்மண்
சுதந்திரம் பேசும்..


அந்நியன் கையில் அடிமையாய் இருப்பவனைவிட
தன்னின மண்ணுக்காய்ச்
சிந்திய உடலுக்குச் சிறப்புண்டு தாயே!


முப்பதினாயிரம் மாவீரர்கள் அல்லவா..?
நீமட்டும்..சாவதற்கு உன்மகளைச் சபிக்கின்றவளாய்..


நாளை உன்னதும் மரணம்..உன்
குஞ்சினதும் மரணம்.. கூட அந்த
நிலத்தின் மடியில் ஒரு மாலையில் எரியலாம்..


ஆனால் விடியலின் மண்ணில்
உன் சாம்பல் ஆயிரம் பூக்களாய்..


இல்லையேல்..
உன் குஞ்சுத் தேவதை
வஞ்சியாய் வனிதையாய்..
பெண்ணினம் போற்றும்
பூக்களாய் விரிவாள்...



மண்ணில் வாழ்வதும்
மண்ணில் மடிவதும்
மண்ணுக்காய் வாழ்வதும்
மண்ணுக்காய் மடிவதும்..
குருதியில் எழுதிக் கொண்ட இளைஞர்கள்
சுருதியாய்த் தமிழர் தேசங்கள் எங்குமாய்..


விடியலுக்கான ஒருமண்..அந்த
வேதத்தில் விளைந்தால்
இறப்புகள் என்பது சரித்திரமாகும்..
இனத்தின் விடுதலை வரலாறெழுதும்..



மண்ணில் இறப்பினும்
மரணமே சிறக்கும்..!
-தீவேரா

சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து வெளிப்படுகிற முனகல் ஐயா. அந்தக்கவிதை!
1 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 13:00
ரமோனா
நன்றி ஐயா,உங்கள் பதில் கடிதத்திற்கு.
வனப்பான வீடுகளில்,வளமான வசதிகளோடு,சொகுசுக்கார்களிலே அமெரிக்காவிலோ,ஐரோப்பாவிலோ
இருந்து கொண்டு என்கவிதையைப் படித்து அதற்குப் பதிலும் எழுதிய
உங்களுக்கும்,உங்கள் தமிழ்பற்றிற்கும் தலைவணங்குகின்றேன்.
அந்தக்கவிதை கம்பிகளுக்குமத்தியில் சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து
வெளிப்படுகிற முனகல் ஐயா. நீங்கள் கவியில் சொன்னதைபோல பசியாலும் பட்டினியாலும்
முலைப்பாலும் கூட வராத சோகம்.மூத்திரத்தைகூட பருக்கலாமா ?அல்லது பருகலாமா?என்று அங்கலாய்க்கிற கையறுநிலைப் பொழுதுதான் ஐயா அது..
58ல் ஐயர் எரிக்கப்பட்டதைச் சொல்லவருகிற தாங்கள் அண்மைக்காலத்தில் நடந்து முடிந்து போன இன அவலத்தைப்பற்றி ஏன்ஐயா மௌனம்? நீங்கள் சொல்கிற ஐ.நா சபையும், அதனால் பயிற்றுவிக்கப்பட்ட வியட்னாமியப் பெண்ணும் இப்பாதகம் நடக்கும் போது பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏன் அகில உலகமும் தான். நம்பிக்கைகள் சிதைந்த போது எழுந்த கவிதை அது. யாரையும் புண்படுத்தவென எழுதவில்லை. நான் ஈழவிடுதலைக்கு எதிரானவளல்ல. தாய்மையின் கடமையும் அதனைப் போல் முக்கியம் என்றெண்ணுபவள் நான்.
அடிமையான வாழ்வைவிட சாவது மேல் என்பது தான் தேவதைக்குஞ்சூடாக நான் சொல்ல விளைந்தது. இப்போதைக்கு உங்கள் குஞ்சுகள் எல்லாம் மாற்று நாட்டுக் குடியுரிமையில்
மகிழ்வாக இருப்பதானால் என்னைப்போல் நீங்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை.மண்ணில் இறப்பினும் மரணம் சிறக்கும் என நீங்கள் புலம் பெயர் மண்ணில் இருந்து வழங்கியிருக்கும் கவிச் சான்றிதழை நான் மகிழ்வோடு ஏற்றுகொள்கின்றேன்
ரமோனா






பதிலுக்குப்பதில்.
2 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 22:28
தீவேரா
இன்னுமொரு பதில்..

ரமோனா!


ஐயர் கொலை ஒரு ஆரம்பம்.
பம்பலப்பிட்டிக் கடற்பறி இன்றானது
இடைவெளியைச் சொன்னபோது
படைக்கொடுமையும் நீ பார்த்துத் தானே..
ஆகவேண்டும்..


சொல்லித்தான் தெரியணுமா என்ன?
இங்கே..உலகத்தில்..
பதினாறு பேர் தீயில் எரிந்தார்கள்.. இல்லையில்லை
தம்மைத் தாமே எரித்தார்கள்..
வெளிநாடு சொர்க்கமில்லைத் தாயே..!


புளியோதரையும் பொரித்த(மீனும்) செத்தலும் கிடைக்கிறதுதான்..

இறந்தவர்கள் இலட்சமல்லவா?
இதை நீ எழுதித்தான் தெரியணுமா?


சும்மாவல்ல உலகப்பந்தில் ஒவ்வொரு தமிழனும்
கருகி வெந்தான்..
புலிகளைத் தெரியாதவர்கள் இவர்கள்..
இலட்சத்து இளைஞர்கள்
ஓடும் வேகக் கார்களைப் பாதையில் மறித்தார்கள்..


எல்லாம் எம்மண்ணின் தாயருக்காக..?
நாங்கள் சடங்கள்..
நம்மண் பறிபோகிறது..
எட்டப்பன் குட்டியோடு தின்னுகிறான்

எங்கள் கை இனத்துக்காய் நீளுகிறது..
எழியவன் விடுகிறான் இல்லை..
அதுமட்டுமா..?
அரசநக்கர்களால் அவலப்படுகிறோம்..

உன்முகாமுக்குள் வர..
உங்கள் பா.ஊக்களுக்குப் பார்வையில்லை
அய்நாவுக்கு அனுமதியில்லை..
எட்டப்பன் மட்டும் இங்கிலாந்தில் இருந்து
அழைக்கப்படுகிறான்..போதாக்குறைக்கு கழியர்நிதி.


தேனும்பாலும் ஓடுகிற திருமதுரை என்றல்லவா
இந்தியத் தீய எட்டப்பன் திருக்கதை விடுகிறான்..


போய்வந்தால் பறுவாயில்லை..
திண்டதிற்குத் தக்கதாய் ஏப்பம் விடுகிறான்..


தூளியிற் தாலாட்டோடு நீயும் இல்லை
நாங்களும் இல்லை..


பெற்றவர் இல்லாத பிள்ளைகள் கொஞ்சமா..?
உற்றவர்க்கு நோகாமல் இனம் இருக்கிறதா?


இனத்தின் கெட்டவர் யார்?
பாராளுமன்றத்தில் தமிழ் இனத்திற்காகப்
பரிதவித்தவர்களைப் பார்த்துப் பார்த்துச்
சுட்டானே ஒருவன்..
ஏன்?

இவன் பல்லக்குச் சரிந்துவிடும் என்பதாற்தானே..?
இவன் பார்த்துப் பார்த்து அப்பாவிகளைத்
தெருவில் சுட்டவன் அல்லவா?

இந்துக் கோவிலை புத்தபிக்கு ஏறி அடித்தான்..
எத்தனை பாதிரிகள் சிலுவையில் செத்தார்கள்..
இவர்கள் உயிர்த்தெழ முடியாதபடி இன்னமும்
சாத்தான்கள்..

இப்பொழுது எங்களுக்கு வலிமை இல்லை..
வாழ்நாள் முழுவதும் சாக்கள் தான்?

இங்கே இருக்கிற ஒவ்வொரு
ஈழத்தமிழனுக்கும் ஒன்றல்ல பத்துவரையான
உடன்பிறப்புக்கள் கொலை செய்யப்பட்டார்கள்..

உனக்கும் வேதனைதான்..
எனக்கும் வேதனைதான்..

அதற்குப் பரிசாய் எம்நாடு
எழும்.. எழுதப்படும்..

அதுவரை நீயழுதும் பயனில்லை..
நானழுதும் பயனில்லை..

இராட்சதர்கள்
பேத்தைகளாய்..
எட்டப்பர் அட்டதிக்கும்..

உன் தொட்டிலுக்குத் தாலாட்டு
தேசங்கள் உனக்குத் தரும்..
அதுவரை நாங்களும் உறங்கோம் தாயே..!



Srilanka der ganze Politiker sind sehr schlecht.
4 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 14:15
Sathees
dieses Gedicht ist sehr gut. Srilanka der ganze Politiker sind sehr schlecht. Ich weiß, dass ein Ding srilankan Tamilisch nicht gute Zeit ist.
sathees

/////////////////////////////////////////////////////
This poem is very good. All the srilanka politicians are very bad. I know this is not good time for Sri lanka tamils.
Sathees
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலி!
3 செவ்வாய்க்கிழமை, 10 நவம்பர் 2009 13:55
செங்கோன்
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலிகளைத்தான் இக்கவிதையில் காண்கின்றேன்.எலிப்பொறிகளைவைத்து யானைப்பிடிப்போமென்ற வாதங்களை மாற்றீடு செய்து
புதியபரிமாணங்களில் சிந்திக்க,செயலாற்ற வேண்டிய பல தேவை அனைவருக்கும் உண்டு. எடுத்தேன் கவிழ்த்தேன் என வீண்ஐம்பம் பேசவல்ல நேரம் அல்ல இது.
செங்கோன்
கொலைகாரன் யார்? தெரியாமல் ஒரு கவிதை..!
2 திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009 14:23
மனிதன்
அறுபது வருடங்களாக இனக்கொலை செய்யும் ஆட்சியை
யார் வெல்வது? எப்போது..?
நீ எழுதும் இந்த எழுத்துகளின் சமநேரத்தில்..
மனவழுத்தம் கொண்டவனை கட்டையால் அடித்துக்
கடலிற் கரைத்தார்களே..? ஏன்
அங்கே என்ன களத்தில் புலிகளா? நின்றார்கள்..
அடிமை விலங்கொடிக்காதவரை..
மிடிமை போகாது தாயே..!..
உனக்கு மீட்சியில்லை என்றால்
உன் பிள்ளைக்கும் இல்லை பெண்ணே..
உன் பிள்ளை அரசாளும் காலம்வரும்.. அழாதே!
யதார்த்தம் பேசுகிற கவிதை!
1 திங்கட்கிழமை, 09 நவம்பர் 2009 13:48
பாலன்
யதார்த்தம் பேசுகிற கவிதை.அழகான வரிகள்.மனதைத் தொடுகிற படம்.
வளர்க உங்கள் இணையம்.
வாழ்த்துக்களோடு.....
பிற்ஸ்பேர்க்கிலிருந்து...... பாலன்


Srilanka der ganze Politiker sind sehr schlecht. தேவதைக் குஞ்சே
வாழத்துடிக்கிற மானிடக்கூட்டத்தின் வலி! தேவதைக் குஞ்சே
சாகக்கிடக்கிற தாயிடம் இருந்து வெளிப்படுகிற முனகல் ஐயா. அந்தக்கவிதை! ரமோனாவுக்கு ஒருபதில்!
கொலைகாரன் யார்? தெரியாமல் ஒரு கவிதை..! தேவதைக் குஞ்சே
யதார்த்தம் பேசுகிற கவிதை! தேவதைக் குஞ்சே

Saturday, October 31, 2009

மகிந்தவிற்கு மலர்மாலை போட்டு மகிழ்கிறது இந்தியா???

கும்பிடக் கும்பிடக் கொழும்பில் அடிவாங்கிக் கரையொதுங்கிக் கிடக்கிறது தமிழரின் மானம்...குத்துவிளக்கேற்றிக் குடம்குடமாய் பால் சொரிந்து மகிந்தவிற்கு மலர்மாலை போட்டு மகிழ்கிறது இந்தியா???

Wednesday, October 28, 2009








நான்...
எப்போதும் போலவே
இப்பொழுதும்...

**தகடூரை அண்டிய அதிகமானின்
நெல்லிக் கனிக்காய்
அலைந்து,அலைந்து....
அங்கிருந்து இங்கும்,
இங்கிருந்து அங்குமாய்...

என்மனதிற்கும், எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!!

"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாம்"

பிணமலைக்குவியலின்,
சரிவுப்புறத்தில் ஒழிந்து
உயிர்தரித்தும்...

குருதி சேற்றுப் படிவினுள்
கால்கள் புதையப்புதைய
ஓடிய பொழுதிலும்...
இரவுபகலாய் எமனாய் விழுகிற
செல்லும்,துப்பாக்கி வேட்டும்,
மாடு குடிமனை மக்களின்
மேலாய் வெடிக்கிற போதிலும்...

ஒரே ஒரு கணத்துள் - என்
துணயாய் வந்தவன்
மண்டை பிளந்துயிர்
மரிக்கிற போதிலும்....

குருட்டுப் பிடிமானத்தோடு - என்
நெஞ்சு முனகும் !

"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாம்"

நான் எப்போதும் - போலவே
இப்போதும்....

என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான் !

கண்ணுக்கெதிரே,
கசக்கிமுகர்ந்து
பொசுங்கிப் போன - என் தமிழ்ப்
பெண்களை....
பச்சைக்குழந்தையின்
பிஞ்சுக் கழுத்தையும்
நசித்துயிர் மாய்த்த
அரக்கத் தனத்தை....
சேலை இடுக்கில் கத்தி சொருகி
மார்பினை அரிந்த
மாபாதகத்தை....

மண்ணினுள்ளே ஆளப்புதைந்தும்..
இறப்பரில் புகைந்தும்..
துடிக்கத்துடிக்க மரித்துபோன
உயிர்களை நினைக்கையில்
உஸ்ணப்பெருமூச்சோடு -என்
குரல் ஒலிக்கும்.

"ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லும்"

நான் எப்போதும் போலவே
இப்போதும்.....

அங்கிருந்து இங்கும்...
இங்கிருந்து அங்குமாய்...
என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும் மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!

- ரமோனா


நான் எப்போதும் - போலவே
இப்போதும்....

என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும்,மரங்களுக்குமுள்ள
தொடர்புதான் !

கண்ணுக்கெதிரே,
கசக்கிமுகர்ந்து
பொசுங்கிப் போன - என் தமிழ்ப்
பெண்களை....
பச்சைக்குழந்தையின்
பிஞ்சுக் கழுத்தையும்
நசித்துயிர் மாய்த்த
அரக்கத் தனத்தை....
சேலை இடுக்கில் கத்தி சொருகி
மார்பினை அரிந்த
மாபாதகத்தை....

மண்ணினுள்ளே ஆளப்புதைந்தும்..
இறப்பரில் புகைந்தும்..
துடிக்கத்துடிக்க மரித்துபோன
உயிர்களை நினைக்கையில்
உஸ்ணப்பெருமூச்சோடு -என்
குரல் ஒலிக்கும்.

"ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லும்"

நான் எப்போதும் போலவே
இப்போதும்.....

அங்கிருந்து இங்கும்...
இங்கிருந்து அங்குமாய்...
என்மனதிற்கும் எனக்கும்
மந்திக்கும் மரங்களுக்குமுள்ள
தொடர்புதான்!

- ரமோனா

குறிப்பு:
**தகடூர்: அதிகமான் மன்னன் அரசாண்ட இடம். அதிகமான் நீண்ட காலம் உயிர் வாழும் சக்தி கொடுக்கும் நெல்லிக்கனி பெற்றவன்.

கருத்துக்கள் (3)
ஆயுதமொன்றே..
3 செவ்வாய்க்கிழமை, 20 அக்டோபர் 2009 12:36
ஈழவன்
உன்னைப் போலவே நானும்..
இன்னும் எரிகிற இனத்தில்
இறந்து கொண்டிருக்கிற வனத்தில்
என்ன செய்யப் போகிறோம்
ஏவுகணையும் எரிகுண்டும் இல்லாத போது..!

உன் கவிதையோடு ஈழம் வெல்லும்.
nettes Gedicht !
2 திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2009 14:42
sathees
nettes Gedicht Ramona.
erhält es aufrecht.
danke
அற்புதமான கவிதை !!
1 திங்கட்கிழமை, 19 அக்டோபர் 2009 14:16
செங்கோன்
"பிணக்குகளைப் பேசித்
தீர்த்திருக்கலாமா? --அல்லது
ஆயுதமொன்றே பிணக்கினைவெல்லுமா??

உண்மையில் ஒவ்வொரு இலங்கைத் தமிழனுக்குள்ளும் இன்றுவரை அறிந்து கொள்ள முடியாதிருக்கின்ற அல்லது புரிந்துகொள்ளமுடியாதிருக்கின்ற அர்த்தமுள்ள கேள்வி இது.. அற்புதமான கவிதை வாழ்த்துக்கள்.


Friday, October 9, 2009

சமாதானப் பரிசு !




எந்தச்சமாதானம் - இங்கு
நிறுவப்பட்டிருக்கிறது

எத்தகைய மாற்றம் - இங்கு
நிகழ்ந்து விட்டிருக்கிறது.

ஊர் எரிய வேவு பார்த்ததையும்,
ஊர், ஊராகச்சென்று
மாலைவாங்கியதையும் தவிர......




அமெரிக்க டாங்கிகளின்
இரும்புச் செயின்களில்
ஆப்கான் குழந்தைகள் - இன்னும்
நசுங்கிக் கிடக்கையில்........

சமாதானப் பரிசு
அறிவிக்கப்பட்டுவிட்டது.

உலகத்து இராசாவிற்கு
இன்னுமோர் கொம்பு.

வல்லமையுள்ளவனுக்கே
சமாதான விருதென்கிறது
நோபலிற்கான தேர்வுக்குழு !


இனி என்ன??
எதையும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும்
ஒப்புக்கொள்ளவேண்டியதுதான்!!!!

Wednesday, October 7, 2009

பெண்ணிய வியாபாரிகள்.

பெண்ணிய வியாபாரிகள்.
ஒரு உண்மை வாக்குமூலம் .....

பத்திரிகைக்காரியாலயம் நடாத்திய பரிசுக்குலுக்கலில் விழுந்த பட்டுப் புடவையைப் பார்க்க ஆசை,ஆசையாய் இருந்தது. இன்று வெள்ளிக்கிழமை. கோவிலுக்குப் போகவேண்டும். இந்தச்சாட்டில் இதனைக்கட்டிவிட வேண்டியதுதான். தீர்மானித்துவிட்டேன்.வாழ்வில் முதல் தடவையாகக் கட்டப்போகிற பட்டுச் சேலை.மனதிற்கு இதமாக இருந்தது. சொண்டுக்கு மைபூசி அழகாய் இருந்த பட்டுச்சேலையின் முந்தானையைச் செருகிக்கொண்டு கண்ணாடிமுன் நின்றேன். என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
சஞ்சிகைகளை சையிக்கிள் கரியரில் கட்டிவைத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பிவிட்டேன். ஐயர் இன்று விசேடமாகபூசை பண்ணினார். பட்டுப் புடவையைப் பார்த்தவுடன் எல்லோரும் மரியாதையோடு நின்றனர். இந்நாட்களில் எடுப்பாகத் தோற்றம் கட்டினால் தான் எல்லாம் மரியாதையாக
நடைபெறுகிறது. வரும் வழியில் 2,3 வழமையான வாடிக்கையாளர்களின் வீடுகளை முடித்துக்கொண்டு திரும்பிய வேளையில் தான் அந்தப்பெரிய மாளிகையின் கதவு அகலத்திறந்திருக்கக் கண்டேன். வாசலில் எவரையும் காணவில்லை. பைசிக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு 2,3 சஞ்சிகைகள் சகிதமாக வாசல் அழைப்பு மணியை அழுத்தினேன். ஆடம்பரமான தேவதை ஒன்று வாசல்கதவைதிறந்து வரவேற்றது.

வாங்கோ..வாங்கோ....வரவேற்புப் பலமாக இருந்தது.
என்னால் என்னை நம்ப முடியவில்லை.
என்னையும் ஒருபொருட்டாக வரவேற்க இவரால் எப்படி முடிந்தது? எல்லாம் இந்தப் பட்டுபுடவையின் நேரமோ....?
உங்கள் பாதம் பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..அந்தத் தேவதை மேலும் குழைந்தாள். எனக்குப் புல்லரித்தது. அம்மா.. நான் வாய் திறந்தேன். என்னைபேச விடாது அவளே தொடர்ந்து பேசினாள்.தான் பிறந்தது இங்கு தானாம், வாழ்ந்தது அமெரிக்காவில், வாழ்க்கைப்பட்டது நோர்வேயில் என்றாள். மகளைப்படிக்க வைக்க இங்கு வந்திருப்பதாகச் சொன்னாள்.தான் சர்வதேச தமிழ்மாதரணித் தலைவர் என்றும் 5 வருடங்களாகத் தானே தலைவியாக இருப்பதாகவும், பெருமை பொங்கச் சொன்னாள். நோர்வே மஞ்சு என்றழைக்கப்படும் தனக்குத் தமிழ்த் தென்றல் என்றொரு பட்டப்பெயரும் கூடவே இருப்பதாகச் சொன்னாள்.
யார் உங்களைத் தலைவியாக்கி இந்தப் பட்டத்தையும் தந்தார்கள்? என்று கேட்க வாயெடுத்தேன். அவள் விடாமால் தொடர்ந்தாள். மாதர் வாழ்வு வளமாகவில்லை, எம்மை ஏமாற்றிக்கொண்டும் எத்திப்பிழைத்துக்கொண்டும் தான் இன்னமும் ஆண் வர்க்கம் இருக்கிறது. நாம் இவற்றிற்கெல்லாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். சற்று நிறுத்தினாள். எனக்கு அடிமுடி பிடிபட வில்லை. அதைவிட எனக்கு நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது. சற்று எழுந்தேன். உட்காரச் சொன்னாள். ஏதாவது குடிக்கப் போகிறீர்களா?
விஸ்கி, கோலா,பியர் ஏதாவாது...இழுத்தாள் நான் வேண்டாமெனத் தலையாட்டினேன். கதவு மணி கிறீச்சிட்டது.
கதவைதிறக்கச் சென்றாள். மூலையிலிருந்த பொம்மரேனியன் இனத்தைசேர்ந்த வெள்ளைநிற அவளின் செல்ல நாய் நீலக்கண்களோடு ஓரு பொம்மையை போல உட்கார்ந்திருந்து என்னை ஏளனமாகப் பார்த்தது.
தொடரும்......

Saturday, October 3, 2009

நான் !!!

நான் !!
நான் உங்களுக்குப் புதியவள் என்பதால் கண்டும் காணாதவர்களாக, வந்தும் வராதவர்கள் போல,படித்தும் படிக்காதவர்கள் போல, பார்த்தும் பார்க்காதவர்கள் போல எப்படி உங்களால் மெல்ல நழுவ முடிகிறது??? தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் என்று எல்லோருக்கும் பின்னூட்டம் இட்டுப் பெரிய மனதோடு கைகொடுத்துத் தூக்கிவிடும் நீங்கள்
எனக்கும் ஒர் கை தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு என்
இரண்டாம் நாள் வாக்குமூலத்தோடு வந்திருக்கின்றேன்.
இந்த வாக்கு மூலத்தை வழங்குகின்ற நான் யார் என்பது உங்களுக்குப் போகப்போகப் புரியலாம்.உயிரோடு இதில் வந்து பதிவிட என்று இன்னமும் உயிரைப் பிடித்திருக்கிற என்னை நீங்களும் கண்டு கொள்வீர்களென்பது என் நம்பிக்கை.
பிறந்ததிலிருந்து இது நாள்வரை என் மனதுக்குபிடித்து,என்னை மீட்கவென எந்த அற்புதங்களும் நிகழ்ந்ததில்லை. எந்த ராஜகுமாரர்களும், எந்தராஜகுமாரத்திகளும் எனக்காக ஒருகணம் நின்று நிதானித்ததுமில்லை. என்னைத் தொட்டணைக்கவெனத் துடிக்கின்ற மீட்பர்கள் எவரும் என்மனதைத் தொட்டணக்கவேண்டுமென முயன்றதுமில்லை. வரலாறு,மதம் ,மொழி, இலக்கியங்கள், பெண்ணியக் குழுக்கள் என்று அத்தனையும் கவனிக்காது,மிதித்துப் போட்டிருக்கிற அற்ப சருகு நான் .உலகத்தின் ஒட்டுமொத்த துக்கமும்,துயரமும் என்மீதே ஊற்றப்பட்டிருப்பதாக சதா எண்ணி ஏங்குகிற ஒரு ஜடம்.

Friday, October 2, 2009

உன்னோடு நான் வருவேன் !

உன்னோடு நான் வருவேன் !

உன்னோடு நான் வருவேன் !

சட்டைப்பை பொய் பேசாது....
சாத்திரமும் சம்பிரதாயமும்
பார்க்காது...
சாதிவகுத்துப் பிரித்து வைக்காது...
தன்னுள் விழும்
சதங்களையும், இலட்சங்களையும்...
சரிசமமாகச் சுமப்பது !

வெற்றுப்பையுடன் வந்து
இலட்சாதிபதியானோர் யார் ??
இலட்சாதிபதிகளாக வந்து
வெற்றுபையாகினோர் யார்??
சட்டைப்பைகள் மட்டுமே தெரிந்து
வைத்திருக்கிற இரகசியம் !

சட்டைப்பைகள் ஒருவேளை
பேசத் தொடங்கினால்..

சமூகத்தின் முதுகெலும்பெனும்
பல தலைகள் - தானாகவே
முகட்டு வளைகளில்ம
தூக்கு மாட்டிக்கொள்ளும்.

உளறுவாயர்கள் பலர்
ஊர் பேர் தெரியாமல் போய்விடுவர் !!

சல்லிக் காசுமற்று
சமூகத்தின் கண்பொத்திக்
காசுக்காரர்களாய் நடிக்கிற..
பேர்வழிகளை - துண்டுவிரித்துத்
தெருவோரம் உட்கார்த்திவைக்கும் !

ஒவ்வொருவர் போட்டு மிதித்த
பூக்களின் கணக்கும்....
பூஜைக்குப்போன பூமாலைகளின் கணக்கும்...அவரவர்
சட்டைப்பைகள் மட்டுமே
அறிந்து வைத்திருக்கிற விடயம் !!

யார் யாரோ பாவிகளுக்காக - பாவம்
சட்டைப்பைகள் தாங்களே
பாவக்கணக்கைச் சுமக்கின்றன !!
மூக்குப் பொடி டப்பா முதல்....
முகமூடித்திருடரின் துப்பாக்கிவரை...
தங்கிச் செஞ்சோற்றுக்கடன்
தீர்க்கும் கர்ணபரம்பரை -
இந்தச் சட்டைப்பைகள் !!

வட்டமாய், சதுரமாய், வடிவங்கள் மாறினாலும்
திட்டமாய் இதனைத் தேடித் திருடர்கள் வந்த போதும்...
கத்தியால் இதனை வெட்டிக் கையாடல் செய்த போது,ம்...

மனைவியர்,கணவன்மார்கள்,மக்கள் என்று எவருமே
வரமாட்டார் மரணநேரம்......
ஆனாலும்
மனிதனே உனக்காய் வந்து
மயானத்தில் அழியும் சட்டைபை !!!

அவர்கள் !!


அவர்கள் !!

மகாதேவன்கள்!!
எல்லாவேதங்களையும்
எழுதியதாய்ச்சொல்லும்
மகான்கள் !!


முற்றிலும்
உணர்ந்ததாய்
உனக்கு மூளைச் சலவை
செய்தவர்கள் !!


அவர்கள் இரு என்றால் இருக்கவும்...
அவர்கள் இற என்றால் இறக்கவும்....
மட்டுமே உனக்கு இங்கு உரிமை.


நீ எப்படி? எவ்வளவு,
காலம் வாழ்வதென்றும்....
என்னென்ன, எப்பொழுது?
நிகழுமென்றும்.....
உனக்காக - அவர்கள்
கணக்குப் போட்டுள்ளார்கள் !!


அவர்கள் அசைவின்றி
உன்னால் ஒரு கண
அசைவுமில்லை !
அவர்களுக்காகப் பேசவே
உன் நாவு!!
அவர்களுக்காகப் பார்க்கவே,
உன் கண்கள்!!

அவர்கள் குரல் கேட்கவே
உன் செவிகள் !!
அவர்களுக்காகச் சிந்திக்கவே
உன் மூளை !
அவர்களுக்காகச் சுவாசிக்கவே
உன் மூக்கு !


சலசலத்தெழுந்த பேராறுகள் கூட
சப்தமில்லாமல் கலந்த
சமுத்திரங்களில்...
புறவுலகம்,அகவுலகம்
சமூகம்...பிரக்ஞை...
முன் நவீனம்... பின் நவீனம்..
என்று கைமதுனத்தால்
விந்து பிறப்பித்துக்
கடல் பெருக்கெடுக்க வைக்கும்
சூட்சும மேதைகள் !!


இன்று - நீ
அவர்களுக்காக
எடுப்புத்தூக்கு!!

அவர்கள் நாலுவரி எழுதி - அதுவே
காப்பியம் என்பார்கள்...
உடனே தலையாட்டு !!

அவர்கள்
கிறுக்கித்தள்ளியவைதான்
கீர்த்தனை என்பார்கள்..
உரத்த குரலில் ஊளையிடு !


நேற்றைய கண்ணாடித் துண்டில்
அவர்களுக்காக வாழப்பிறந்த
உன் இன்றய முகம்
சப்தமில்லாமற் காணாமற்போவது
கண்டும் கலங்காதிருக்கிறாய் நீ...
மொட்டைமரமாய் இலையுதிர்த்தும் பனிப்புலத்துள் பட்ட மரமாகிப் போய் நிற்கும் .....
எனக்கு மொழியிருந்தும், என்னால் அதைப் பேச முடியவில்லை.
எனக்கு மதம் இருந்தும், என்னால் அதைத் தழுவ முடியவில்லை.
எனக்கு மண்ணிருந்தும், என்னால் அம் மண்ணில் வாழ முடியவில்லை.
எனக்குப் பெயரிருந்தும், என்னால் அப்பெயரைப் பயன்படுத்தமுடியவில்லை.
என் கடவுள்களை நானே சிருஸ்டித்துவிட்டு,அவைகளைக் கைதொழுவதைவிட எனக்கு வேறு ஏதும் புரியவில்லை.