Wednesday, October 7, 2009

பெண்ணிய வியாபாரிகள்.

பெண்ணிய வியாபாரிகள்.
ஒரு உண்மை வாக்குமூலம் .....

பத்திரிகைக்காரியாலயம் நடாத்திய பரிசுக்குலுக்கலில் விழுந்த பட்டுப் புடவையைப் பார்க்க ஆசை,ஆசையாய் இருந்தது. இன்று வெள்ளிக்கிழமை. கோவிலுக்குப் போகவேண்டும். இந்தச்சாட்டில் இதனைக்கட்டிவிட வேண்டியதுதான். தீர்மானித்துவிட்டேன்.வாழ்வில் முதல் தடவையாகக் கட்டப்போகிற பட்டுச் சேலை.மனதிற்கு இதமாக இருந்தது. சொண்டுக்கு மைபூசி அழகாய் இருந்த பட்டுச்சேலையின் முந்தானையைச் செருகிக்கொண்டு கண்ணாடிமுன் நின்றேன். என் கண்ணே பட்டுவிடும் போலிருந்தது.
சஞ்சிகைகளை சையிக்கிள் கரியரில் கட்டிவைத்துக் கொண்டு கோவிலுக்குக் கிளம்பிவிட்டேன். ஐயர் இன்று விசேடமாகபூசை பண்ணினார். பட்டுப் புடவையைப் பார்த்தவுடன் எல்லோரும் மரியாதையோடு நின்றனர். இந்நாட்களில் எடுப்பாகத் தோற்றம் கட்டினால் தான் எல்லாம் மரியாதையாக
நடைபெறுகிறது. வரும் வழியில் 2,3 வழமையான வாடிக்கையாளர்களின் வீடுகளை முடித்துக்கொண்டு திரும்பிய வேளையில் தான் அந்தப்பெரிய மாளிகையின் கதவு அகலத்திறந்திருக்கக் கண்டேன். வாசலில் எவரையும் காணவில்லை. பைசிக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு 2,3 சஞ்சிகைகள் சகிதமாக வாசல் அழைப்பு மணியை அழுத்தினேன். ஆடம்பரமான தேவதை ஒன்று வாசல்கதவைதிறந்து வரவேற்றது.

வாங்கோ..வாங்கோ....வரவேற்புப் பலமாக இருந்தது.
என்னால் என்னை நம்ப முடியவில்லை.
என்னையும் ஒருபொருட்டாக வரவேற்க இவரால் எப்படி முடிந்தது? எல்லாம் இந்தப் பட்டுபுடவையின் நேரமோ....?
உங்கள் பாதம் பட நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..அந்தத் தேவதை மேலும் குழைந்தாள். எனக்குப் புல்லரித்தது. அம்மா.. நான் வாய் திறந்தேன். என்னைபேச விடாது அவளே தொடர்ந்து பேசினாள்.தான் பிறந்தது இங்கு தானாம், வாழ்ந்தது அமெரிக்காவில், வாழ்க்கைப்பட்டது நோர்வேயில் என்றாள். மகளைப்படிக்க வைக்க இங்கு வந்திருப்பதாகச் சொன்னாள்.தான் சர்வதேச தமிழ்மாதரணித் தலைவர் என்றும் 5 வருடங்களாகத் தானே தலைவியாக இருப்பதாகவும், பெருமை பொங்கச் சொன்னாள். நோர்வே மஞ்சு என்றழைக்கப்படும் தனக்குத் தமிழ்த் தென்றல் என்றொரு பட்டப்பெயரும் கூடவே இருப்பதாகச் சொன்னாள்.
யார் உங்களைத் தலைவியாக்கி இந்தப் பட்டத்தையும் தந்தார்கள்? என்று கேட்க வாயெடுத்தேன். அவள் விடாமால் தொடர்ந்தாள். மாதர் வாழ்வு வளமாகவில்லை, எம்மை ஏமாற்றிக்கொண்டும் எத்திப்பிழைத்துக்கொண்டும் தான் இன்னமும் ஆண் வர்க்கம் இருக்கிறது. நாம் இவற்றிற்கெல்லாம் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். சற்று நிறுத்தினாள். எனக்கு அடிமுடி பிடிபட வில்லை. அதைவிட எனக்கு நேரம் வேறு போய்க்கொண்டிருந்தது. சற்று எழுந்தேன். உட்காரச் சொன்னாள். ஏதாவது குடிக்கப் போகிறீர்களா?
விஸ்கி, கோலா,பியர் ஏதாவாது...இழுத்தாள் நான் வேண்டாமெனத் தலையாட்டினேன். கதவு மணி கிறீச்சிட்டது.
கதவைதிறக்கச் சென்றாள். மூலையிலிருந்த பொம்மரேனியன் இனத்தைசேர்ந்த வெள்ளைநிற அவளின் செல்ல நாய் நீலக்கண்களோடு ஓரு பொம்மையை போல உட்கார்ந்திருந்து என்னை ஏளனமாகப் பார்த்தது.
தொடரும்......

No comments:

Post a Comment